உயர்தர பரீட்சை முடிவுகளில் சாதனை படைத்தது புனித மைக்கேல் - மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த வின்சன்ட் மாணவி

வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியான கௌரிகாந்தன் நிஷாங்கினி என்னும் மாணவி கணித பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியில் நான்காம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

இதேபோன்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ரா.ரிசோத்மன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

இதேபோன்று புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் ஒருவர் கணித பாடத்தில் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தினைப்பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் வாஸ் தெரிவித்தார்.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள முடிவுகளின் படியும் நண்பகல் வரை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலும் 12மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 11மாணவர்கள் வைத்திய துறைக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக துறையில் முதல் இடத்தினை பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குறுமண்வெளி சிவசக்தி வித்தியாலய மாணவன் நவரத்தினம் கஜாந்த் பெற்றுள்ளதுடன் கலைப்பிரிவிலும் பட்டிருப்பு வலயத்தின் பாடசாலை மாவட்ட ரீதியில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளதாகவும் பட்டிருப்பு வலய கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து செயற்படும்போது வெற்றிபெறமுடியும் என கணித பாடத்தில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் பட்டிருப்பு கிராமத்தினை சேர்ந்த கௌரிகாந்தன் நிஷாங்கினி தெரிவிக்கின்றார்.