சந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிறைப்படுத்தமுடியாது –ரி.எம்.வி.பி.யின் மகளிர் அணி தலைவி

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிறைப்படுத்தமுடியாத என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  நாவற்கேணியில் நடைபெற்றது.

இதன்போது குறித்த பகுதியில் உள்ள 20 குடும்ப பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான நிதிகள் வழங்கப்பட்டன.

இதற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினரினால் இரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாக மகளிர் அணித்தலைவர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மாலதி மகேஸ்வரன் உட்பட மகளிர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய திருமதி செல்வி மனோகர்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலையை போக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.கடந்த காலத்தில் எமது கட்சி தலைவர் சந்திரகாந்தனால் வாழ்வாதார திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன.பல பெண்கள் அதன் மூலம் சிறந்த பலன்களைப்பெற்று தமது குடும்ப நிலைமையை மேம்படுத்தியுள்ளனர்.

சந்திரகாந்தன் இன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவரது பணியை சிறையில் அடைக்கமுடியாது.அதனை நாங்கள் முன்னெடுப்போம்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி அதன் அர்ப்பணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

மிக விரையில் எமது தலைவர் நிரபராதியாக வெளிவருவார்.மேலும் எங்கள் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படும்.கிழக்கு மாகாண தமிழர்களின் எதிர்காலம் எமது குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் எமது கட்சி சிந்தித்து செயற்பட்டுவருகின்றது என்றார்.