மட்டக்களப்பில் மின்கம்பத்துடன் மோதி வான் விபத்து –மின்சாரம் துண்டிப்பு

கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் மைலம்பாவெளியில் வீதியின் மருங்கில் நடப்பட்டிருந்த அதி உயர் 33 ஆயிரம் வோல்டேஜ் மின்சார கம்பிகளைத் தாங்கிச் செல்லும் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்தது.

தூக்கக் கலக்கத்தில் கட்டுப்பாட்டை மீறி வீதித் தடத்திலிருந்து தவறி வீதியின் மறு மருங்கிலிருந்த மின் கம்பத்தில் மோதி வேன் தரித்து நின்றுள்ளது.

அதிகாலை 4.20 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் ஏறாவூர் நகரம் உட்பட இன்னும் சில பிரதேசங்களில் சில மணி நேரங்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தது
.
வேனில் பயணித்த மட்டக்களப்பைச் சேர்ந்த போதகரான மகேந்திரன் என்பவரே விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேன் சேதமடைந்துள்ளதோடு வீதியின் அருகிலிருந்த வீட்டு வேலி, சிறிய கடை, மின்சாரக் கம்பம் மின் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகள் என்பனவும் விபத்தின் காரணமாகச் சேதமடைந்துள்ளன.

வாகனத்தைக் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.