சிங்கள் பகுதிகளில் நாடக பயிற்சிகள் மூலமே ஆளுமையுள்ளவர்கள் உருவாகின்றனர் –பேராசிரியர் மௌனகுரு

சிங்களப்பகுதிகளில் அதிகளவான நாடகப்பயிற்சிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் ஆளுமையுள்ளவர்களாக மாறுகின்றனர் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் அரங்க ஆய்வுகூட தலைவருமான பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடகப்பயிற்சி நெறியொன்று இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி மகளிர் வித்தியாலயத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் அழகியல் கற்கைகள் பிரிவினால் இந்த பயிற்சி நெறி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் அழகியல் கற்கைகள் பிரிவின் பிரதிக்கல்வி பணிப்பாளர் கே.ஜயஸ்ரீபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

முதல் கட்டமாக இந்த பயிற்சி நெறியில் நூறு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூட பயிற்சியாளர்களினால் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பேராசிரியர் மௌனகுரு,

நாடகத்துறைக்கு பயிற்சிக்கு செல்லும் அதற்கான ஊக்குவிப்புகள் வழங்கப்படுவதில்லை.ஏனைய பாடத்திற்கு வழங்கப்படும் ஊக்குவிப்புகள் நாடக கல்விக்கு வழங்கப்படுவதில்லை.

ஆனால் ஏனைய பாடங்களில் கிடைக்காத பல திறன்கள் நாடகம் மூலம் கிடைக்கின்றன.அதன்காரணமாகவே ஜனாதிபதி சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாடக பாடத்தினை கட்டாய பாடமாக மாற்றினார்.

அவர் பிரான்சில் கல்வி கற்றவர் நாடகம் தொடர்பாக அறிவைக்கொண்டிருந்தவர்,நாடக சூழலில் வளர்ந்தவர்,நாடகம் எவ்வாறு ஆளுமையை உருவாக்கும் என்பதை கண்டு சிங்கள,தமிழ் பகுதிகளில் நாடத்துறையை முக்கிய பாடமாக மாற்றினார்.சிங்களப்பகுதிகளில் அதிகளவான நாடகப்பயிற்சிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் ஆளுமையுள்ளவர்களாக மாறுகின்றனர்.நாங்களும் இங்கு செய்ய முற்சிக்கின்றோம்.

மாணவர்கள் தங்களது திறன்களை வளர்ப்பதற்கு நாடகப்பயிற்சி மிகவும் முக்கியமாகும்.நாடக பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு 40க்கும் மேற்பட்ட திறன்கள் வளர்க்கப்படுகின்றன.மனதை ஒருநிலைப்படுத்தும் திறன்,கற்பனை பண்ணும் திறன்,இணைந்து செயலாற்றும் திறன்,தலைமைதாங்கும் திறன்,துணிவுடன் கருத்துகளை எடுத்துக்கூறும் திறன் இவ்வாறு பல திறன்கள் வளர்ச்சிபெறுகின்றன.

நாடக கல்வி ஊடாக பல்வேறு திறன்களை வளர்ப்பதுதான் நாடக கல்வியின் நோக்கமாகும்.அதனை நாடகம் கற்பிக்கும் ஆசிரியர்கள் சரியான வகையில் புரிந்துகொள்வதில்லை.

கற்பிக்கும் ஆசிரியர்கள் நாடக கல்வியை புரிந்துகொள்ளாத காரணத்தினாலும் நாடக கல்வியை சரியான முறையில் கற்பிக்கும் அறிவு இல்லாத காரணத்தினாலும் மாணவர்களுக்கு சரியான முறையில் நாடக கல்வி பயிற்றுவிக்கப்படுவதில்லை.நாடக கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கடினமாக பயிற்சி திட்டங்களை செய்யவேண்டும்.அதற்கான நடவடிக்கையினை கல்வித்திணைக்களம் மேற்கொள்ளும் என நம்புகின்றேன் என்றார்.