தினக்குரல் ஊடாக மட்டக்களப்பு மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு

யாழ் தினக்குரலின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
யாழ் தினக்குரலினால் நடாத்தப்பட்டுவரும் கருணைப்பாலம் சமூக சேவைகள் அமைப்பின் ஊடாக இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.


இதுவரையில் வடமாகாணத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த அமைப்பின் பணி முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

தினக்குரல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இது தொடர்பான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

தினக்குரல் நிறுவனத்தின் விநியோக முகாமையாளர் ரி.பரமானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் கே.மகேந்திரகுமார் உட்பட ஆசிரியர்கள் அதிபர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது 45 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.இவற்றுக்காக சுமார் ஆறு இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக தினக்குரல் நிறுவனத்தின் விநியோக முகாமையாளர் ரி.பரமானந்தன் தெரிவித்தார்.