கஞ்சா வைத்திருந்த மூதாட்டிக்கு விளக்கமறியல் -கல்முனையில் சம்பவம்

விற்பனைக்காக 8 கிராம் 74 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 75 வயது மூதாட்டி ஒருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


தமக்குக் கிடைக்கபெற்ற ரகசியத் தகவலையடுத்து கல்முனைக்குடி 12, பழைய தபாலக வீதியைச் சேர்ந்த முஹைதீன் பாபா சாலிம்மா (வயது 75) என்பவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 கிராம் 65 மில்லி கிராம் மற்றும் 4 கிராம் 9 மில்லி கிராம் ஆகிய அளவுகள் கொண்ட விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கஞ்சாக் கட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

கல்முனை தலைமையக பொலிஸ் அதிகாரி அப்துல் கப்பார் தலைமையிலான பொலிஸ் அணியினர் இந்த சோதனையை மேற்கொண்டிருந்தனர்.

சந்தேக நபரான மூதாட்டி ஞாயிறன்று கல்முனை பதில் நீதிவான் எம்.கே. பேரின்பராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் நொவெம்பெர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கல்முனைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.