நெஞ்சுவலியால் தாழங்குடா கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழப்பு

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


வவுணதீவு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சிரமதான நடவடிக்கைக்காக நேற்று திங்கட்கிழமை சென்றிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றும் புஸ்பலதா அன்டனி(49வயது)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்களின் பாடசாலை சமூக செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட இரு பாடசாலைகளில் சிரமதான பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்கீழ் கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நேற்று சிரமதானங்கள் நடைபெற்றதுடன் அங்கு தங்கியிருந்து இன்று செவ்வாய்க்கிழமை குறிஞ்சாமுனையில் சிரமதானம் மேற்கொள்ளப்படவிருந்தது.

இந்த நிலையிலேயே மாணவிகளுடன் தங்கியிருந்த குறித்த விரிவுரையாளருக்கு நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.