100 நாள் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது - பூ.பிரசாந்தன்

புதிய அரசாங்கத்தின் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் படுவான்கரை பிரதேசம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன்; தெரிவித்துள்ளார்.


100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அவர் விடுத்துள்ள ஊடாக அறிக்கையிலேயே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்;களப்பு மாவட்ட அபிவிருத்திக்கென சுமார் 149.28 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வாழைச்சேனை மத்திக்கு 54.25 மில்லியனும், ஓட்டமாவடிக்கு 55.00 மில்லியனும் கோறளைப்பற்று தெற்கு 10.75 மில்லியனுமாக இஸ்லாமிய பகுதிகளுக்கு மொத்தமாக ரூபா 120.00 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வவுணதீவு, பட்டிப்பளை, போரதீவு, பிரதேசங்களுக்கும் ஆரையம்பதி பிரதேசத்திற்க்கும், எதுவித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது முற்றிலும் நல்லாட்சியில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதனைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதிகமாக தமிழர்களின் வாக்குகளினாலேயே இவ் நல்லாட்சி அரசின் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார் அவ்வாறிருக்கையில் அதிகமாக நம்பி வாக்களித்த தமிழ் சமூகம் அபிவிருத்தியில் பங்காளிகள் இல்லாது புறக்கணிக்கப்படுவதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்;தலை இலக்கு வைத்து பயனிக்கமுனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறித்த நிதி ஒதுக்கீட்டு விடயத்தில் மௌனமாகஉள்ளது ஜீரனிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணக்க ஆட்சியும் மத்திய ஆட்சியில் அரசின் பங்காளியாகவும் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்கள் மீதான நிதி ஒதுக்கீட்டு புறக்கணிப்பை வேடிக்கை பார்க்கின்றது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஒரு பக்கச்சார்பாக திட்ட முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. வெளிநாட்டு நிதிகளைக் கொண்டு புணரமைத்து விட்டு தங்களின் நிதி ஒதுக்கீடு என்கிறார்கள். மண்முனைப்பாலம், ஆயித்தியமலைப்பாலம்,வவுணதீவுப்பாலம்,ஆயித்தியமலைவீதி, வவுணதீவு கொக்கட்டிச்சோலைவீதிகள் என பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது விமர்சித்தவர்கள் இன்று அரசின் பங்காளியாக இருந்து கொண்டு அரசின் 100 நாள் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதிகளை கூட தமிழ் பிரதேசங்களுக்கு இனவிகிதாசார அடிப்படையில் பிரித்துக்கொடுக்க முடியாத திராணியற்றவர்களாக  உள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் திறக்கப்படும் எல்லாத்திட்டங்களும் அன்று அவர்களாலே விமர்சிக்கப்பட்ட திட்டங்களாகும் என்பதனை சுட்டிக்காட்ட விருப்புகின்றேன்.

அரசியல் பங்காளியாக இருப்பது அரசின் செயற்பாடுகளுக்கும், தமிழர்களின் எல்லைப் பகுதியில் காணி அபகரிப்பு மற்றும் தமிழ் உயர் அதிகாரிகள் மாற்றப்படும் போது அதனை நியாயப்படுத்தி வக்காளத்து வாங்குவதற்கும் அல்ல வாக்களித்த தமிழ் சமூகம் நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்படுவதனை தட்டிக்கேட்க முடியாது விட்டால் மக்கள் பிரதிநிதி என்று கூறிக்கொள்வதில் எந்த பலனும் இல்லை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சியில் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்த போதும் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்த போதும்  அனைத்து சமூகத்திற்கும் சமமாகவே சேவை புரிந்தோம் அதே போன்று மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் என்ற வகையில் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களையும் சமமாக பார்க்க வேண்டிய பொறுப்புமிக்க அமைச்சர் அமிர் அலி படுவாங்கரைப் பிரதேசத்தினையும்,ஆரையம்பதியையும் புறக்கணித்தது முறையற்றது எனவும் குறிப்பிட்டார்.