அரச நியமனங்களுக்குள் உள்வாங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான தேர்வில் தோற்றியும்; ஆசிரியர்களாக உள்வாங்க்கப்படாதவர்களை ஆசிரியர் உதவியாளர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கையெடுக்குமாறு பாதிப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இன்று சனிக்கிழமை காலை மட்;டக்களப்பு காந்திப்பூங்காவில் ஒன்றுகூடிய அவர்கள் வாவிக்கரையில் உள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தின் அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

2007ஆம் ஆண்டு தேர்வில் தோற்றியபோதிலும் நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை கடந்த காலத்தில் அரசாங்கங்களின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் தற்போது அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

எனினும் தமது நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என இதன்போது தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர்கள் சேவைக்குள் உள்வாங்குவது என்பது முடியாத காரியம்.ஆனால் அவர்களை ஏனைய சேவைகளுக்குள் இணைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கமுடியும்.

அது தொடர்பில் மத்திய அரசு ஊடாக அமைச்சரவைக்கு கொண்டுசென்று அதன் மூலம் கிழக்கு மாகாணசபையில் உள்ளீர்ப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

எனவே இவற்றினை உடனடியாக செய்யமுடியாது.படிப்படியாக இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.