தலைவர்களின் உருவப்படம் எரித்து பாதையில் குந்தகம் விளைவித்தது மிகுந்த வேதனையான விடயம் -சீ.யோகேஸ்வரன் எம்.பி.(வீடியோ இணைப்பு)

புலம்பெயர் உறவுகள் தாங்கள் முடிவுசெய்வதையே நாங்கள் கேட்கவேண்டும் அதன்படியே நாங்கள் நடக்க வேண்டும் என வலியுறுத்த முடியாது. எங்கள் மக்களின் நிலையையும் கோரிக்கையையும் அடிப்படையாகக்கொண்டே நாங்கள் செயற்பட முடியும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

எங்களுக்காக எமது மக்களுக்காக எமது நீண்டகாலமாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் உறவுகள் நாட்டின் தற்போமைய நிலைமையை தமிழர்களின் நிலைமையை  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைமையை உணராது எமது தலைவருக்கு கொடும்பாவி எரித்து எமது பாதையில் குந்தகம் விளைவிக்கின்ற செயலை செய்வதையிட்டு மிகுந்த வேதனையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்டக்களப்பு திரேசா பெண்கள் பாடசாலையில் நீர் பாவை சிலை திறப்பு விழாவும் வருடாந்த மெய்வல்லுனர் போட்டியும் சிறப்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதிமாலதி பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தமிழர்களின் கலை கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்ப்பாவை சிலை இங்கு அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் அழைத்துவரப்பட்டதுடன் மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த மெய்வல்லுனர் போட்டியில் இந்த ஆண்டுக்கான சம்பியனாக மரிய அசுந்தா இல்லம் முதலிடத்தினைப்பெற்றுகொண்டதுடன் மரிய கொரட்டி அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.