தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவாளர் மீது ஏறாவூரில் தாக்குதல்

மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று சனிக்கிழமை செங்கலடி பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.


எறாவூர் 5ம் குறிச்சியைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் ஏகாம்பரம் பாக்கியநாதன் என்பவர் செங்கலடி செல்லம் தியேட்டருக்கு அண்மையில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது கூரிய ஆயுதங்களினால் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.

மிகவும் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் இருந்த குறித்த நபரை பொது மக்கள் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர் தற்போது  சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் முறையான விசாரணைகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

செங்கலடி மோகனும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் இணைந்து நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்களை கொலை செய்வதாக மிரட்டி வருவதுடன்  பலர் மீது தாக்குதல் நடாத்தியும்  வருவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதுடன் தாக்குதல்களும் மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.