வட கீழ் பருவமழைக்காலத்தினை எதிர் கொள்ளும் வகையிலான அனர்த்த முன்னேற்பாடு கூட்டம்

வட கீழ் பருவமழைக்காலத்தினை எதிர் கொள்ளும் வகையிலான அனர்த்த முன்னேற்பாடு தொடர்பிலான உயர் மட்டக்கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், இராணுவத்தின் 232ஆவது பிரிகேட்டின் கட்டளைத்தளபதி கேணல் ரவீந்திர டயஸ், 231 ஆவது பிரிக்கேட்டின் கட்டளைத்தளபதி கேணல் சுகத்த திலகரத்ன, 233 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஸர் அஜித் ஏகநாயகே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், இராணுவ, பொலிஸ், விமானப்படையினர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நவம்பர் முதல் பெப்ரவரி முதல் எதிர்பார்க்கப்படும் வடகீழ் பருவ மழைக்காலத்தில் மழை வெள்ளம், சுழல்காற்று, சூறாவளி, புயல்காற்று உளளிட்ட அபாயங்கள் ஏற்படுவது வழமையாகும். அந்தவகையில் இதற்கான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.