களுவாஞ்சிகுடியில் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கான முத்திரையிடும் பணிகள் ஆரம்பம்

நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கான முத்திரையிடும் பணிகள் நேற்று முதல் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நியமங்கள் சேவைகள் அளவீட்டு அலகுகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி வி.விக்னேஷ்வரன்  தெரிவித்தார்.

இப்பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள நிறுத்தல், அளத்தல் கருவிகளுக்கான முத்திரையிடும் பணிகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான முத்திரையிடும் பணிகள் இம்மாவட்டத்தில் கிரான், செங்கலடி, ஏறாவூர்நகர், வவுணதீவு, கொக்கடிச்சோலை, வெல்லாவெளி, மண்முனை, வடக்கு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தரிவித்தார்.

நிறுத்தல், அளத்தல், கருவிகளுக்கு முத்திரையிடாத வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மாதம் மட்டக்களப்பின் பல பகுதிகளில் நிறுவை மற்றும் அளவைகளுக்கான முத்திரையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பலர் சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர்.