வெளிநாட்டிலிருந்த கொண்டுவரப்பட்ட 'குஷ்' என்னும் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இந்தோனேசியாவினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இந்த போதைப்பொருளை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து கொள்வனவு செய்து, இந்தியாவின் பெங்களூரு நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு பயணப் பொதிகளுக்குள் 5 பொதிகளாக பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 401 கிராம் எடையுள்ள குஷ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
