எலிக்காய்ச்சலை தடுக்க விசேட வேலைத்திட்டம் - சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும்  அபாயத்தை  தடுப்பதற்காக  பொது  மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விழிப்புணர்வூட்டும்  வேலைத்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை  சுகாதார  வைத்திய அதிகாரி  எம்.எம்.நௌசாட்  ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.
குறிப்பாக செய்கையில்  ஈடுபடும்  விவசாயிகள்  மற்றும்  உப உணவுப்  பயிர்ச் செய்கையில்  ஈடுபடுபவர்களுக்கு இந்த நோய் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும். அவதானமாக செயற்படுமாறும் அவர்  கூறியதுடன் எலிக்காய்ச்சல்  பரவாமல்  தடுப்பது  தொடர்பாக  விவசாயிகளுக்கும்,  விவசாய  போதனாசிரியர்களுக்கும்   பொதுச் சுகாதார  பரிசோதகர்களால்  விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காய்ச்சல்,  தசைகளில்  கடுமையான  வலி, கண் விழி சிவப்பு  நிறம் அடைதல்,  சிறுநீர்  வெளியேற்றம்  குறைவடைதல்,  சிறுநீருடன்  இரத்தம்  வெளியேறுதல்  இந்த  நோயின்  அறிகுறிகளாகும்.

நாய்கள்,  கால்நடைகள் , பூனை,  எலி  போன்ற  பிராணிகளிலும்  லெப்டோஸ்பைரா  காணப்படுகிறது.  பிராணிகள்  பாதிக்கப்பட்டு  அவற்றின்  சிறு நீர்,  நீர்நிலைகளினூடாக,  கண் மூக்கு சருமத்தினூடாக பக்ரீரியா உள் நுழைகிறது.
ஒரு நபரிடம் இருந்து இன்னொருவருக்கு நேரடியாக பரவுவதில்லை. எனவே அதிக தொற்றுக்குள்ளாக கூடிய வயல் வெளிகளில் பணி புரிவோர் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இவ்வாறான  அறிகுறிகள்  காணப்பட்டால்  விவசாயிகள்  சுகாதார  வைத்தியதிகாரி  அலுவலகத்துடன்  அல்லது  தமது  பொதுச் சுகாதார  பரிசோதகர்களுடன்  தொடர்பு  கொண்டு நோய்  தடுப்பு  தொடர்பான  மாத்திரைகள்  பெற்றுக்  கொள்ளுமாறும்,  கொதித்தாறிய  நீரை பருகுமாறும் தெரிவித்துள்ளார்.