தமிழ்க் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்த மஹிந்த!!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்.

இரா. சம்பந்தன் நாட்டிற்காக ஆற்றிய சேவைக்காக அவரை கௌரவித்ததாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய பிரச்சினையை நிவர்த்திப்பதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ள விடயத்திற்கு பொதுஜன பெரமுன உள்ளிட்டோர் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என இதன்போது இரா. சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.

தீர்வுத் திட்டம் தொடர்பில் முன்மொழிவுகள் வந்தவுடன், அதனை ஆராய்ந்து ஆதரவு வழங்குவதாக இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டின் தற்போதைய நெருக்கடிகள், தேசிய பிரச்சினை தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.