வீட்டின் யன்னல் உடைத்து வெற்று சிலிண்டரை திருடிய திருடன்!!


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திற்கு உட்பட்ட பாட்டாளிபுரம் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள வீரமாநகர் கிராமத்தில் ஆட்கள் இல்லாத வீடொன்றின் யன்னலை உடைத்து உள் நுழைந்த திருடன் காசு நகை மற்றும் பெறுமதியான பொருட்கள் எவற்றையும் திருடாது காலியான எரிவாயு சிலிண்டரை மட்டும் திருடிச் சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய நாட்களில் இது போன்ற மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறித்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீரமாநகர் மற்றும் உப்பூறல் பகுதிகளில் வசிக்கும் சிலர் வெற்றுச் சிலிண்டர்களுக்கு பத்தாயிரம் தொடக்கம் இருபத்தைந்தாயிரம் வரை கொடுத்துக் கொள்வனவு செய்கின்றதாகவும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரவுப் பிரச்சனைகள் காரணமாக சம்பவங்கள் தொடர்பான போலீஸ் முறைப்பாடுகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.