ஜந்து அடி கற்சிலை அமைந்துள்ளதும் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த மருத மரத்தை தல விருட்சமாகவும் கொண்ட அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கல சங்காபிசேக இலட்சாட்சனை நிகழ்வானது இன்று இடம்பெற்றது. ஜந்து முகங்களுடன் ஐந்தடி உயரத்தில் திருக்காட்சி தரும் ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் கற்சிலை அமைந்துள்ள ஆலயங்களில் முக்கியத்துவம் மிக்கதான இவ்வாலயத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை நிகழ்வானது கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமாகி ஆஞ்சநேய ஜெயந்தி தினமான 02ஆம் திகதி இடம்பெற்ற 108 சத அஸ்டோத்திர கலச சங்காபிசேகத்துடன நிறைவுற்றது.
அதிசயம் மிக்க இப்பெருமைமிகு ஆலயமானது குருதேவர் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் அமைக்கப்பட்டதுடன் மலேசியாவை சேர்ந்த ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டலுடன் நடைபெற்று வருகின்றது.
கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு இன்று வரையான 10 நாட்களும் காலை மாலை விசேட பூஜைகளுடன் நடைபெற்று வந்தன.
இன்று காலை குரு பூஜை நடைபெற்றதுடன் ஆஞ்சநேயப்பெருமானுக்கு பாலாபிசேகமும் நடைபெற்று விசேட பூஜைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து விசேட யாகபூஜைகள் ஆரம்பமாவதுடன் யாகபூஜையில் அடியவர்களினால் ஆகுதிகள் சொரியப்பட்டது. பின்னர் பிரதான கும்ப வெளிவீதி உலாவும் இடம்பெற்றது.
வெளிவீதி உலாவாக எடுத்துவரப்படும் பிரதான கும்பம் ஆஞ்சநேய சுவாமி மீது சொரியப்பட்டு 1008 ஆஞ்சநேய மந்திர உச்சாடணமும் அலங்கார பூஜையும் நடைபெற்றதன் பின்னர் பூஜைகள் நிறைவுற்றது.
காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் ஆசிர்வாதத்தோடு ஆலய பரிபாலகர் நல்லதம்பி கந்தசாமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கிரியைகள் யாவற்றையும் கிரியாகலாநிதி வித்தியாசாதகர் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ணியகிருஸ்ணகுமாரக்குருக்கள் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ த.குகனேஸ்வர சர்மா ஆகியோர் நடாத்தி வைத்தனர்.