கண்டி பிரபல பாடசாலை மாணவிக்கு கொரோனா தொற்றா? பதறிய ஆசிரியர்கள்.

சுவாச கோளாறுக்கு உள்ளான மாணவி ஒருவரை வைத்தியசாலையில் சேர்ப்பிப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எவரும் முன்வராத சந்தர்ப்பம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது.

கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய குறித்த மாணவி பாடசாலைக்கு சமூகமளித்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் திடீரென சுகயீனமடைந்துள்ளதோடு சுவாசிக்கவும் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் 1990 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி சுவசெரிய நோயாளர் காவு வண்டியினை வரவழைத்துள்ளனர்.

நோயாளர் காவு வண்டி பாடசாலைக்குள் வருகை தந்ததும் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வது யார் என்பது குறித்து ஆசிரியர்களுக்கிடையில் போட்டி நிலவியுள்ளது.

மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் கொண்ட ஆசிரியர்கள் மாணவியின் அருகிலும் செல்லாமல் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு காத்திருந்துள்ளனர்.

இவ்வாறிருக்கு மாணவியை நோயாளர் காவு வண்டிக்கு ஏற்றி அமரச்செய்யவும் எந்த தரப்பும் முன்வரவில்லை என்பது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரும் முன்வராத இந்த சந்தரப்பத்தில் நோயாளர் காவு வாகனத்தின் சாரதி தானே முன்வந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சேர்ப்பித்துள்ளார்.

இதன்பின்னர் ஆசிரியை ஒருவர் குறித்த வாகனத்தில் மாணவியை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்க அவருடன் சென்றுள்ளார்.

குறித்த மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும் அவர் சுவாசக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளதோடு, மாணவிக்கான சுவாச மட்டம் மிக குறைந்தளவிலேயே காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால் மாணவி உயிரிழந்திருப்பாள் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.