சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் அமைய வேண்டும் - மட்டக்களப்பு மாநகர முதல்வர்

மலர்ந்துள்ள விகாரி புதுவருடமானது எம் எல்லோர் மத்தியிலும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் ஓர் நல்லாண்டாக அமைய வேண்டும். என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தமது தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்ற தமிழ் மக்களுக்கான உரிமையும், சுயமரியாதையும், கௌரவமும் மலர்ந்துள்ள இப்புத்தாண்டிலேயே கிடைப்பதற்கு இறைவனின் அனுக்கிரகம் கிடைப்பதுடன், மனித மனங்களில் உள்ள பிரிவினைகள் அனைத்தும் அகன்று சகோதரத்துவமும், சமாதானமும், நல்லுறவும், மனிதநேயமும் நிறைந்த ஆண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்.

மேலும் பெரும்பான்மை இனவாத பிடியிலிருந்தும், குறுகிய கட்சி அரசியல் நலனிலிருந்தும் ஆட்சியாளர்கள் விடுபட்டு, தமிழ் பேசும் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவதன் ஊடாக அவர்களின் மனங்களை வெற்றி கொள்வதாகவும் இவ்வாண்டானது அமைய வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் அவாவாகும். 

அத்தோடு எமது மட்டக்களப்பு மாநகரை முதன்மை மாநகரமாக கட்டியெழுப்ப வேண்டுமென்ற எமது இலக்கினை அடைவதற்கு அனைத்து தரப்பினரும் தம்முள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக எம்முடன் பயணிக்க இப் புத்தாண்டில் திடசங்கற்ப்பம் கொள்வோம். 

புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்து வந்திருக்கும் இந்த புதிய ஆண்டு, அனைத்த நல் உள்ளங்களுக்கும் ஒரு வளம் நிறைந்த சுபீட்சம் மிக்க இனிய புத்தாண்டாக அமைய எனது நல் வாழ்த்துக்கள்.