பல்லாயிரக்கணக்கானோர் புடை சூழ நடைபெற்ற மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.
மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இராமனால் வழிபட்ட ஆலயமாகவும் இராவணனால் வழிபடப்பட்ட ஆலயமாகவும் நீண்டகால வரலாற்றினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் ஒன்பதாவது தினமான இன்று தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தேரடிக்கு சுவாமி கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

பூஜையினை தொடர்ந்து அடியார்களின் அரோகரா கோசத்துடன் பெண்கள் ஒரு புறமாகவும் ஆண்கள் ஒரு புறமாகவும் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

நாளை செவ்வாய்க்கிழமை பிதிர்கடன் போக்கும் மாமாங்கேஸ்வரரின் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.இதனையொட்டு விசேட பஸ்சேவைகள் மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.