மனநோயாளிகளை வீதிகளில் விடுவது மனிதாபிமானமற்ற செயல் -சிப்லி பாரூக்

மனநோயாளிகளை பராமரிக்காது வீதிகளில் அலைய விடுவது மனிதாபிமானமற்ற செயல் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (2016.05.03) காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரதேசத்தில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக ஆராயும் கூட்டமொன்றில் அவர் கருத்துத் தெரிவித்தார்.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், மன நோய் வைத்திய நிபுணர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியின் பிரதி நிதி ஆகியோருட்பட இன்னும் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஷிப்லி பாறூக் கூறியதாவது,

காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில் அங்கம் வகிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத பரோபகாரி ஒருவரால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள மன நோய் சிகிச்சைப் பிரிவு மே மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

நானறிந்த வகையில் காத்தான்குடியைச் சேர்ந்த புத்தி சுயாதீனமற்ற  நால்வர் நீர் நிலைகளில் விழுந்தும், ஒருவர் புகையிரதத்தில் அடிபட்டும், ஒருவர் வீதி விபத்திலும் இறந்துள்ளனர்.

இதே நிலை எமது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டால் பார்த்துக் கொண்டு இருப்போமா? இது தவிர காணாமல் போனவர்கள், வாகனத்தில் அடிபட்டு இறந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள் என பலரும் உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலதிகமாக போதைப்பொருள் பாவனையால் மன நலம் பாதிக்கப்பட்டு வீதியில் அலைபவர்களும் எம்மத்தியில் ஏராளம் உண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அல்ல பரவலாக பல  ஊர்களிலும் மன நோயால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதுடன் ஒரு சில இடங்களில் இவர்கள் எவ்விதமான பராமரிப்பும் இன்றி அனாதரவாக கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் அலைந்து திரிவது மனவேதனைக்குரிய விடயமாகும்.

இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய பொறுப்பு புத்தி சுவாதீனமாக உள்ள நம் எல்லோருக்கும் உண்டு என்றார்.