உறுகாமம் ஆயுர்வேத வைத்தியசாலையை இயங்கச்செய்யுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை

மட்டக்களப்பு, செங்கலடி பதுளை வீதியின் உறுகாமம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்;வேத வைத்தியசாலை
இதுவரை இயங்காததினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் நிதி ஒதுக்கீட்டு மூலம் உறுகாமம் மீள்குடியேற்ற கிராமத்தில் புதிதாக ஆயுர்வேத வைத்தியசாலை அமைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேலாக சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும் இவ் வைத்தியசாலை இதுவரையில் இயங்காமல் இருப்பது குறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

செங்கலடி பதுளை வீதியிலுள்ள கோப்பாவெளி, உறுகாமம், கித்துள், கரடியனாறு, வேப்பவட்டுவான், மரப்பாலம், உன்னிச்சை, இலுப்படிச்சேனை போன்ற 15இற்கும்; மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மை கருதி  இவ் ஆயுள்வேத வைத்தியசாலைக் கட்டிடம் கட்டப்பட்டு சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் இது தொடர்பில் எந்தவித கவனமும் செலுத்தாததினால் இக் கட்டிடம் பூட்டப்பட்ட நிலையில் பல மாத காலமாக இருந்து வருவதால் நோயாளிகள் நாளாந்தம் சுமார் 35 கிலோ மீற்றர் தூரம் ஏறாவூர் பிரதேசத்திற்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ் விடயத்தில் கவனம் செலுத்தி இந் நோயாளர்களின் நன்மை கருதி இவ் வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவரை நியமிப்பதோடு மருந்து வகைகளையும் அனுப்பி இவ்வைத்தியசாலையை செயற்பட வைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.