படகு கவிழ்ந்து விபத்து- பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 29 பேர் பலி...!!


வடக்கு நைஜீரியாவின் கெனோ மாநிலத்தின், வடரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

படாவ் கிராமத்தில் இருந்து பாக்வாய் நகருக்கு 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் மத நிகழ்வொன்றுக்குச் சென்ற, 6 முதல் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான படகில் சுமார் 40 மாணவர்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர்த்தப்பிய 7 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்ததற்கான காரணம் தெரியவராத நிலையில், அதிக சுமை மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக இந்த விபத்துக்கு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அண்டை மாநிலமான ஜிகாவா மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது ஏழு சிறுமிகள் மூழ்கி இறந்த அதேவேளை, கடந்த மே மாதத்தில் கெப்பி மாநிலத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இதே போன்ற விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.