பிள்ளையான் மீது 11 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு –அனைத்திற்கும் மறுப்பு தெரிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் 11குற்றச்சாட்டுகள் சட்ட அதிபரினால் மேல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ளதுடன் அக்குற்றசாட்டுகளை சந்தேக நபர்கள் நிராகரித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக    7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபதியினால்   மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்  எதிரிகளாக  குறிப்பிடப்பட்டுள்ள 7பேரில்  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும்  சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு  மாகாண சபை உறுப்பினரான பிரதீப்  மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா , கஜன் மாமா என அழைக்கப்படும்  ரெங்கசாமி  கனகநாயகம் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய  மீராலெப்பை கலீல்  ஆகியோர் கைதாகி ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி  எம். வை. எம்  இஸடீன் முன்னிலையில் . இந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது குறித்த 4 எதிரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சட்ட மா அதிபதியினால்  முன் வைக்கப்பட்டுள்ள 11 குற்றச்சாட்டுக்களும்  தனித்தனியாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட வேளை அதனை நிராகரித்த எதிரிகள் தாங்கள் சுற்றவாளி என தெரிவித்தனர்.

எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி வரை வழக்கு விசாரனை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிரிகள்  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம்  சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி  உட்பட சிலர் காயமடைந்தனர்.

இந்த படுகொலை  தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குறித்த நான்கு பேரும் 2015 அக்டோபர் மாதம் குற்றப்புலனாய்வு துறையினரால்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.