கிழக்கு எழுக தமிழுக்கு மட்டக்களப்பு தயார்நிலையில்

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.விஜயகுமார் தெரிவித்தார்.

நாளை வெள்ளிக்கிழமை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் இந்த கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் தொடக்கம் சிவானந்தா தேசியபாடசாலைவரையில் சிவப்புமஞ்சல் கொடிகள் வீதியெங்கும் நடப்பட்டுள்ளது.

அத்துடன் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதான அலங்கரிப்பு வேலைகளும் பூர்த்தியடைந்துள்ளன.

நாளை வெள்ளிக்கிழமை காலை கல்லடி மணிக்கூண்டு கோபுரம் இருந்து எழுக தமிழ் எழுச்சிப்பேரணி ஆரம்பமாகி நாவற்குடாவில் விழா நடைபெறும் இடம் வரையில் குறித்த எழுச்சிப்பேரணி நடைபெறவுள்ளதாக சட்டத்தரணி எஸ்.விஜயகுமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.விக்னேஸ்வரன்,இணைத்தலைவர் ரி.வசந்தராஜா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் எழுச்சியுரையாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காலம்காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் இணைந்த வடகிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதையும் சமஸ்டியின் மூலமே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை காணமுடியும் என்பதையும் தமிழ் மக்கள் சார்பில் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் அணி திரண்டுவந்து தமது கோரிக்கைகளை உலகுக்கு உரத்துச்செல்லும் வகையில் ஒன்றுகூடுமாறும் தமிழ் மக்கள் பேரவையினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.