மட்டக்களப்பு நகரில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்ககோரியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

கவன ஈர்ப்பு பேரணியான மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியுடாக மட்டக்களப்பு நகரினை அடைந்து கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையினை அடைந்து வாவிக்கரையூடாக பீடத்தினை வந்தடைந்தது.

இதன்போது மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்ககோரியும் காந்திபூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாணவர்களினால் நடாத்தப்பட்டது.

கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது எதிர்ப்பினை காட்டும் வகையில் மாறுவேடங்களையும் அணிந்திருந்ததுடன் எதிர்ப்பு சுலோகங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.