காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவர் மாணவனின் தந்தையினால் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மத்திய கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இல்ல விளையாட்டுப்போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபோது மாணவர் ஒருவரின் தந்தையால் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

இல்ல விளையாட்டுப்போட்டிக்கு ஆயத்த வேளைகளில் குறித்த ஆசிரியர் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அதனை குழப்பும் வகையில் மாணவர்கள் செயற்பட்டதாகவும் அதன்போது ஆசிரியர் குறித்த மாணவர்களை விரட்டியபோது ஒரு மாணவன் கீழே வீந்ததாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு வந்த குறித்த மாணவின் தந்தையால் ஆசிரியர் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் குறித்த ஆசிரியர் மற்றும் அதிபரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்தினை பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை சமூகம் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.