சத்துருக்கொண்டான் குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மனின் நகைகள் கொள்ளை

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஆலயத்தின் கூரை வழியாக உள்நுழைந்துள்ள கொள்ளையர்கள் ஆலயத்தில் அம்மனுக்கு அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நான்கு தங்க மாலைகளைக்கொண்ட எட்டு பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த டிவீடி பிளேயர் ஒன்றையும் கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஆலய நிர்வாக சபையினரினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் ஆலயத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

கயிறுகொண்டு ஆலயத்தின் கூரையில் ஓட்டினைக்கழட்டி உள்நுழைந்து மூலஸ்தானத்தில் அம்மனுக்கு அணிவித்திருந்த நான்கு தங்க மாலைகளை கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட தடவியல் குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.