கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்;டுப்போட்டி

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார்,இராம கிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபுபிரபானந்த ஜி மகராஜ் மற்றும் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிதிகள் வரவழைக்கப்பட்டு கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இல்ல மாணவர்கள் பங்குகொண்ட மாபெரும் அணி நடை மரியாதை செலுத்து நிகழ்வு கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

அவபாமியா,நிவேதிதா,சாரதா என மூன்று இல்லங்களாக மாணர்கள் பிரிக்கப்பட்டு குழுநிலை போட்டிகளும் மெய்வல்லுனர் போட்டிகளும் நடாத்தப்பட்டுவந்த நிலையில் இன்று இறுதி நிகழ்வாக இந்த இல்ல விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.

இதன்போது பல்வேறு சுவட்டு போட்டிகள் நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் ஆகியோருக்கான போட்டிகளும் நடைபெற்றதுடன் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.

இந்த விளையாட்டுப்போட்டியில் விசேடமாக 400மீற்றர் தூரம் கொண்ட சைக்கிள்களில் பங்குபற்றும் மரதன் ஓட்ட நிகழ்வும் இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாடசாலைகளின் வரலாற்றில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்ட மாபெரும் யோகாசன கண்காட்சியும் இதன்போது நடைபெற்றன.வண்ண உடைகளில் மாணவர்கள் நடாத்திய யோகாசன கண்காட்சி அனைவரையும் வெகுவாக கவர்வனவாக இருந்தது.

நடைபெற்ற அனைத்து போட்டிகளின் அடிப்படையில் 399புள்ளிகளைப்பெற்று அவபாமியா இல்லம் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்டதுடன் 390 புள்ளிகளைப்பெற்று சாரதா இல்லம் இரண்டாம் இடத்தினையும் 366 புள்ளிகளைப்பெற்று நிவேதிதா இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

மாலை வரை நடைபெற்ற இந்த நிகழ்வின் இறுதியில் இதன்போது அதிதிகளினால் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் வெற்றிக்கேடயங்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.