கேப்பாபுலவுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஆதரவு கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் ஏற்பாடுசெய்த மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடாத்தப்பட்டது.

வாயில் கறுப்பு துணி கட்டியவாறு “பச்சிளங்குழந்தையும் கொதிக்கிறது கோப்பாபுலவு அரசே!உடன் திரும்பிப்பார்” என்ற கோசத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,தமிழ் மக்கள்பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கேப்பாபுலவு மக்களின் காணியை அவர்களுக்க வழங்கி அவர்களை நிம்மதியாக வாழவைப்பதற்கான நடவடிக்கையினை நல்லாட்சி அரசாங்கம் எடுக்கவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

நாங்கள் எங்கள் நிலத்தையே கேட்கின்றோம்,எங்கள் பரிதவிப்பு உங்களுக்கு பரிகாசமா,ஆட்சிமாற்றத்திற்கு வாக்களிக்கும் கருவிகளா நாங்கள்?,நல்லாட்சி அரசே தமிழர்களின் பொறுமையினை சோதிக்காதே,வெளியேறுவெளியேறு அரசபடையே வெளியேறு,எங்களை எங்கள் நிலத்தில் வாழவிடு போன்று சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.