கொள்கையில்லாத அமைச்சர் அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறுவது கேலிக்கூத்தானது –கோவிந்தன் கருணாகரம்

ஒரு கொள்கையே எல்லாத கட்சியில் உள்ள ஒரு கொள்கையே இல்லாத அமைச்சர்,ஒரு கொள்கையே இல்லாத மக்கள் பிரதிநிதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறுவது கேலிக்கூத்தாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்கேணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இன்று ஆறு உறுப்பினர்கள் உள்ளனர்.நாங்கள் மத்திய,மாகாண அரசுகளினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் பிரதேச,மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் தெளிவுபடுத்திவருகின்றோம்.

ஆனால் அடிப்படை அறிவற்றவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இருப்பதாக பிரதியமைச்சர் கடந்தவாரம் காத்தான்குடியில் வைத்து தெரிவித்துள்ளார்.இந்த கருத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அடிப்படை அறிவு அற்றவர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் செயற்படவில்லையென்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.அடிப்படை அறிவு என்றால் என்ன?கொள்கையென்றால் என்ன என்பதை அமீர்அலி தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

பிரதியமைச்சர் அமீரலி அவர் உள்ள கட்சியின் நிலை அதன் அரசியல்நிலையை சற்று திரும்பிப்பார்க்கவேண்டும். ஒரு கொள்கையே எல்லாத கட்சியில் உள்ள ஒரு கொள்கையே இல்லாத அமைச்சர்,ஒரு கொள்கையே இல்லாத மக்கள் பிரதிநிதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறுவது கேலிக்கூத்தாகும்.

ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு பின்னர் மக்கள் காங்கிரஸ் என கட்சி தாவிச்சென்றதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய பட்டியில் பாராளுமன்ற உறுப்பினராக மாறி ஒரே நாளில் மைத்திரியின் பக்கம் தாவிய இந்த கொள்கையில்லாத அமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட இணைத்தலைவராக இருந்துகொண்டு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடிவிட்டு ஊடகவியலாளர்களை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு உள்வாங்க மறுத்த இந்த பிரதியமைச்சரின் கூற்றுக்கு எதிராக கிழக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரனும் யோகேஸ்வரனும் குரல் கொடுத்தன் காரணமாக ஊடகவியலாளர்கள் அந்த கூட்டத்திற்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.

ஊடகவியலாளர்களை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு அழைக்காமல் நாங்கள் கூட்டம் நடாத்துவதாக இருந்தால் அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பொதுமக்களுக்கு தெரியாத நிலையே இருக்கும்.பாராளுமன்றத்தில் நடப்பகைவள் நேரடி ஒளிபரப்பு செய்துநாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்போது தாங்கள் செய்யும் தில்லுமுள்ளுகள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த விடயத்தினை தட்டிக்கேட்டற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறும் இந்த அமைச்சருக்கு அடிப்படை அறிவு உள்ளதா என்பதை அவர் தன்னைத்தானே கேட்கவேண்டும்.