மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியானால் 70ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 70ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் ஆராயும் வகையில் விசேட மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த கூட்டம் இன்று காலை நடாத்தப்பட்டது.

மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனர்த்த முகாமைத்து திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் எஸ்.அமலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் நிலையில் மக்களுக்கான ஏற்பாடுகளைமேற்கொள்வது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

வறட்சி காரணமாக 20ஆயிரம் விவசாயிகள் உட்பட 70ஆயிரம் குடும்பங்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வறட்சி தொடருமானால் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களைப்பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டதுடன் வறட்சியில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

உள்ளுராட்சி திணைக்களங்கள்,பிரதேச செயலகம் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை என்பன இணைந்து குடிநீர்தட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

அத்துடன் வறட்சி தொடர்ச்சியாக இருக்குமானால் மூன்ற மாதகாலத்திற்கு மட்டுமே குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்கமுடியும் எனவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.