இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு

(சசி துறையூர்)

நடைபெற்று முடிந்த நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில்  85வீத வாக்களிப்பினை பதிவு செய்து மட்டக்களப்பு மாவட்டம் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜனாப் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிகூடிய வாக்குப்பதிவினை செய்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.தனி நபர் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற வெற்றியாளர்கள் வரிசையிலும் முதலாம் இரண்டாமிடங்களையும் மட்டக்களப்பு மாவட்டமே தக்க வைத்துள்ளது.

முதலாமிடம் செல்வன் மனேகரன்சுரேஸ்காந் (கல்குடா தேர்தல் தொகுதி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு) பெற்றுக்கொண்ட வாக்குகள் 3264 ,இரண்டாமிடம்செல்வி அருள் நாயகம் தர்ஷிக்கா (மட்டக்களப்பு தேர்தல் தொகுதி மண்முனை மேற்கு பிரதேசம்) பெற்றுக் கொண்ட வாக்குகள் 1862.
இந்தச் சாதனையை நிகழ்த்த முழு மூச்சாகப் பாடுபட்ட  இளைஞர் சேவை அதிகாரிகள், அவர்களைச் சிறந்த முறையில் நெறிப்படுத்திய மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள், அவர்களுக்கு ஆலோசனைகளையும், முழு ஒத்துழைப்பினையும் வழங்கிய பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், சுமுகமான முறையில் தேர்தல் நடைபெற தங்களது முழுப் பங்களிப்பினையும் வழங்கிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகஷ்தர்கள், இளைஞர் சேவை அதிகாரிகளுடன் தோளோடு தோள் நின்று செயற்பட்ட இளைஞர் கழக பிரதேச சம்மேளனத் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், வாகன வசதிகள் மற்றும் ஏனைய உதவிகளைச் செய்து வாக்களிப்பினை அதிகரிக்கச் செய்த நல்ளுள்ளங்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்டக்காரியாலய மற்றும் புதுக்குடியிருப்பு பயிற்சி நிலையத்தின் உத்தியோகஷ்தர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தங்களது வெற்றிக்காக பல வழிகளிலும் பாடுபட்டு வாக்களிப்பை அதிகரிக்கச் செய்த அன்பிற்குரிய வேட்பாளர்கள் ஆகிய அனைவருக்கு எனது நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வதோடு வெற்றி பெற்ற கௌரவ இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என உதவிப்பணிப்பாளர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் வாக்களிப்பு வீதத்தில் இரண்டாவதாக மொனராகலை மாவட்டமும் , மூன்றாவதாக அம்பாரை மாவட்டமும் நான்காவதாக முல்லைத்தீவு மாவட்டமும் காணப்படுகிறது என்பதுடன், மாகாண ரீதியில் கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் முதலாம் இரண்டாமிடங்களை பெற்றிருப்பதும் விசேடமாக குறிப்பிடத்தக்கது.