மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு பிள்ளையானின் நிதியொதுக்கீட்டில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டில் சமூகசேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்த இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைச்சாலை அத்தியட்சர் அக்பர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்,சமூகசேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி,மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அலுமாரிகள்,மின்விசிறிகள்,தொலைக்காட்சி பெட்டிகள் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.